மற்ற தென் மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, கேரளா மிகச் சிறிய மாநிலம். மக்கள் தொகையும் குறைவு தான். ஆனால், இந்த மாநிலத்தின் மண்ணின் மைந்தர்கள் தான், மத்திய அரசின் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்றால், நம்ப முடிகிறதா? ஆனால், அது தான் உண்மை.
ஒவ்வொரு துறையின் தலைமைப் பதவியையும் மலையாளிகள் தான் அலங்கரித்து கொண்டிருக்கின்றனர். கடந்த வாரம் இந்த பட்டியலில் மேலும் ஒரு மலையாள மண்ணின் மைந்தர் இடம் பிடித்துள்ளார். அவர் பெயர் பி.ஜே.தாமஸ். மத்திய கண்காணிப்பு துறை ஆணையராக இவர் கடந்த வாரம் பதவியேற்றுள்ளார். பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ., இவரது நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையிலும், இவரை கண்காணிப்பு துறை ஆணையர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்திருக்கிறது மத்திய அரசு. இப்போதெல்லாம், டில்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் மலையாள மணம் கம, கமக்கிறது. கடவுளின் சொந்த நாடு என கூறப்படும் கேரளாவில் இருந்து, கூட்டம், கூட்டமாக டில்லியை நோக்கி அதிகாரிகள் கூட்டம் படையெடுத்த வண்ணம் இருக்கிறது. உதாரணத்துக்கு, மத்திய அரசின் மிகப் பெரிய பொறுப்புகளை தங்கள் கைக்குள் வைத்துள்ள மலையாள மண்ணின் மைந்தர்கள் சிலரின் பெயர்கள்:
கே.எம். சந்திரசேகர் – மத்திய அமைச்சரவை செயலர்
சிவ்சங்கர் மேனன் – தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
நிருபமா ராவ் – வெளியுறவுச் செயலர்
பி.ஜே.தாமஸ் – மத்திய கண்காணிப்பு துறை ஆணையர்
டி.கே.ஏ.நாயர் – பிரதமரின் முதன்மை செயலர்
மாதவன் நம்பியார் – விமான போக்குவரத்து செயலர்
ஜி.கே.பிள்ளை – உள்துறை செயலர்
சிவ்சங்கர் மேனன் – தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
நிருபமா ராவ் – வெளியுறவுச் செயலர்
பி.ஜே.தாமஸ் – மத்திய கண்காணிப்பு துறை ஆணையர்
டி.கே.ஏ.நாயர் – பிரதமரின் முதன்மை செயலர்
மாதவன் நம்பியார் – விமான போக்குவரத்து செயலர்
ஜி.கே.பிள்ளை – உள்துறை செயலர்
இவர்களைத் தவிர, கேரளாவில் பிறக்காவிட்டாலும், இந்தியன் சிவில் சர்வீஸ் பணிகளில் இடம் பிடித்துள்ள கேரளா பேட்ஜ் அதிகாரிகள் ஏராளமானோர் மத்திய அரசு பணிகளிலும் கொடி கட்டிப் பறக்கின்றனர். இந்திய தணிக்கை கட்டுப்பாட்டு ஜெனரல் வினோத் ராய், மத்திய திட்ட கமிஷன் செயலர் சுதா பிள்ளை ஆகியோரை குறிப்பிட்டு கூறலாம்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், காங்கிரஸ் தலைவருமான சோனியாவின் தனி பாதுகாப்பு செயலர் பி.பி.மாதவன் நம்பூதிரியும் கேரளா தான். இவரது மகன் திருமணத்தில் பங்கேற்பதற்காக தான், காங்., பொதுச் செயலர் ராகுல் சமீபத்தில் திருச்சூர் சென்றார். மத்திய அரசுப் பதவிகளில் கேரள மாநிலத்தவர் ஆதிக்கம் செலுத்துவது என்பது, நீண்ட காலமாகவே உள்ளது. சுதந்திரம் அடைவதற்கு முன்பே, இந்த நடைமுறை உண்டு. வைசிராய் மவுண்ட்பேட்டன் காலத்தில், அவரது நம்பிக்கையை பெற்ற ஊழியராக இருந்தவர் வி.பி. மேனன், கேரளாவைச் சேர்ந்தவர் தான். ஒரே விரலில், மிக வேகமாக டைப் செய்யும் திறமை பெற்றவர்.
தற்போதைய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கரின் மேனனின் குடும்பத்தின் பெரும்பாலானோர், மத்திய அரசுப் பணிகளில் பணியாற்றிவர்கள் தான். இவரது தந்தை, பி.என். மேனன் யுகோஸ்லோவியாவில் இந்திய தூதராக பணியாற்றியவர். இவரது தாத்தா கே.பி.எஸ்.மேனன், இந்தியாவின் முதல் வெளியுறவுச் செயலராக பணியாற்றியவர். இவரது உறவினர் கே.பி.எஸ்.மேனன் (ஜூனியர்) சீனாவுக்கான இந்திய தூதரக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இதுதவிர, கேரள மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், டில்லியில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். கல்வி அறிவும், ஏற்றுக் கொண்ட பணியை திறம்படச் செய்து முடிக்கும் மனப்பான்மையும் தான், சேட்டன்களை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது.
நன்றி: தினமலர்